முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவி முதன்முதலாக பா.ஜ.க ஆட்சியில் உருவாக்கப்பட்டு, முதல் தலைமைத் தளபதியாக 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக, 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் ராணுவத் தளபதியாக அவர் பதவி வகித்துவந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 62 வயதை அடைவதற்கு முன்பாகவே ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகி, முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இவருக்கு 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தலைமைத் தளபதி பதவிக்காலம் இருந்தது.
பிபின் ராவத் தலைமைத் தளபதியாக இருந்த காலகட்டத்தில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை தீவிரமாக இருந்தது. எல்லையில் ஏற்பட்ட பிரச்னைகளை பிபின் ராவத் திறமையாகக் கையாண்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரத்தில் புகழப்பட்டது. சீனா உடனான எல்லைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதுபோல, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஆட்சியதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. இத்தகைய சூழலில், பிபின் ராவத்தின் திடீர் மரணம் இந்தியாவில் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: சீனாவைக் கடுப்பேற்றும் இந்திய, ரஷ்ய உறவு?! AK-203, S-400 ஏவுகணை பர்ச்சேஸ் - இரண்டிலும் என்ன ஸ்பெஷல்?
முப்படைகளின் தலைமைத் தளபதி என்கிற பதவி மிக முக்கியமான பல பொறுப்புகளைக் கொண்டது. குறிப்பாக, ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகர் உள்ளிட்ட பொறுப்புகளை முப்படைத் தலைமைத் தளபதி கவனிப்பார். முப்படைகளின் தலைமைத் தளபதி நியமனத்துக்குப் பிறகு, ராணுவ விவகாரங்கள் துறையின் கீழ் ஆயுதப்படைகள் கொண்டுவரப்பட்டன. ஆபரேஷன், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள், பயிற்சி, தகவல் தொடர்பு, பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தலைமைத் தளபதியின் முக்கியப் பணி.
முப்படைத் தளபதிகள் இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் பிபின் ராவத் முக்கியப் பங்கு வகித்தார். அவரின் இழப்பால் காலியாக இருக்கும் முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்கு யார் வரப்போகிறார் என்பதை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த பணிகளை சிறப்பாக மேற்கொள்ளக்கூடிய தகுதிவாய்ந்த ஒருவரைத் தேர்வு செய்வதற்கு ஆலோசனைகள் நடந்துவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ராவத்துக்கு அடுத்தபடியாக, மூத்த சீனியார் அதிகாரியாக இருப்பவர் ராணுவத் தளபதியான எம்.எம்.நரவானே. தற்போது பதவியில் இருக்கும் கப்பற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி ஆகியோரைவிட சீனியரான எம்.எம்.நரவானே, 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ராணுவத் தளபதியாக பதவியேற்றார். அவருக்கு இந்த பதவிக்காலம் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரை இருக்கிறது. பிபின் ராவத் மறைந்த நிலையில், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்றதாகவும், தலைமைத் தளபதியாக அடுத்து யாரை நியமிக்கலாம் என்பது குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
from International https://ift.tt/3rRqqIS
via
