அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த யங் சூக் ஆன் (42), சில ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவி சே கியோங் ஆனை விவாகரத்து செய்தார். ஆனாலும், இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி இருவருக்குமிடையே பணம் தொடர்பான வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த யங் சூக் ஆன், சே கியோங் ஆனை தாக்கியிருக்கிறார். அதில் அவர் மயக்கமடையவே, அவரின் கை-கால்களை கயிற்றால் கட்டி, வாயில் டேப் வைத்து ஒட்டியிருக்கிறார்.
அப்போது அந்தப் பெண்ணின் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சிலிருந்து அவரின் மகளுக்கு குறுஞ்செய்தி சென்றிருக்கிறது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த அந்தப் பெண், நடந்த நிகழ்வை யூகித்துக்கொண்டு, தனது ஸ்மார்ட் வாட்சிலிருந்து அவசர எண்ணுக்கு அழைத்திருக்கிறார. வாயில் டேப் ஒட்டப்பட்டிருந்ததால், கை, கால்களை தட்டியும், உதைத்தும் ஆபத்து என்பதை மட்டும் உணர்த்தியிருக்கிறார். சத்தம் கேட்டு வந்த கணவர் அந்த ஸ்மார்ட் வாட்சை சுத்தியலால் அடித்து சேதப்படுத்தியிருக்கிறார். இதனால் அந்தப் பெண்ணின் கையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை காரில் அடைத்துக்கொண்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குச் சென்றவர், அங்கேயே பள்ளம் தோண்டி அவரை உயிரோடு புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். பின்னர் தன்னுடைய கை-கால் கட்டுகளைப் பிரித்துக்கொண்டு, புதைக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியேவந்த அந்தப் பெண், அருகிலிருந்த ஒரு வீட்டில் தஞ்சமடைந்திருக்கிறார்.
அங்கிருந்து காவல்துறைக்கும் தகவலளித்திருக்கிறார். இதற்கிடையே காவல்துறையினர் ஸ்மார்ட் வாட்சின் லொகேஷன் மூலம் அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from International https://ift.tt/qzEfUt1
via
