2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது தொடுக்கப்பட்ட ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. உக்ரைன், நேட்டோவில் சேர முடிவெடுத்தால் வந்த போரால், அமெரிக்கா இன்றும் தனது நிலையான ஆதரவை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. கடந்த வாரம், உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பைடன், 500 மில்லியன் டாலர் அளவிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதற்கடுத்த நாளே, ``உக்ரைனில் நடக்கும் அனைத்துக்கும் மேற்கத்திய நாடுகளே பொறுப்பு, சரியான வழியில் பதிலளிப்போம்" என புதின் கூறியிருந்தார்.
அதேசமயம், ரஷ்யாவுக்குச் சீனா தனது உச்சக்கட்ட ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நேட்டோ கூறியிருந்தது. ஆனால் சீனாவோ, ``எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரஷ்யாவும், உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், சீன அதிபரைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.
போரின் ஓராண்டு நிறைவையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெலன்ஸ்கி, ``ரஷ்யாவுக்குச் சீனா ஆயுதங்கள் வழங்காது என்று நான் நம்புகிறேன். என்னைப்பொறுத்தமட்டில், இது மிகவும் முக்கியமானது. அதோடு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நான் சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன். இது நமக்கும், உலகின் பாதுகாப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சீனாவுடன் எங்களுக்குப் பெரியளவில் வர்த்தகம் உள்ளது. சீனா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. உக்ரைனைப் பற்றி சீனா பேச ஆரம்பித்திருப்பது தவறானதல்ல என்று நினைக்கிறேன். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின் என்ன இருக்கிறது, அதை அவர்கள் எங்கு கொண்டுசெல்வார்கள் என்பதுதான் கேள்வி" என்றார்.
from International https://ift.tt/Cq7kQj3
via
