குஜராத் மாநிலம், காந்தி நகர் மாவட்டம் கலோஸ் பகுதியில் வசித்து வந்தவர் பிரிஜி குமார் யாதவ். இவருக்கு பூஜா என்ற மனைவியும், தன்மென் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், பிரிஜி குமார் யாதவ் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேற நினைத்திருக்கிறார். இதற்காக கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு செய்யும், தரகர் குழுவையும் அணுகியிருக்கிறார். அந்த தரகர் குழு வழங்கிய ஆலோசனைப்படி, கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பிரிஜி குமார் யாதவ் தன்னுடைய மனைவி பூஜா, மகன் தன்மென்னுடன் மும்பை வழியாக துருக்கிக்குச் சென்று, துருக்கியிலிருந்து பின்னர் மெக்ஸிகோ சென்றிருக்கிறார்.

மெக்ஸிகோ அமெரிக்கா எல்லையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின்போது கட்டப்பட்ட `ட்ரம்ப் வால்' எனும் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் செல்ல முயன்ற பிரிஜி குமார் யாதவ் பூஜா தம்பதி, தங்கள் மகனுடன் அந்த சுவற்றின்மீது ஏறியிருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுவற்றின் உச்சியிலிருந்து மூன்று பேரும் கீழே விழுந்திருக்கின்றனர். அதில் பிரிஜி குமார் யாதவ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மனைவி பூஜா அமெரிக்காவிலும், மகன் மெக்ஸிகோவிலும் விழுந்து படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், பூஜா, தன்மெனை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். உயிரிழந்த பிரிஜி குமார் யாதவின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். பிரிஜி குமார் யாதவிடம் பணம் பறிக்கும்நோக்கில், அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிய 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
from International https://ift.tt/XTl1Ym9
via
