கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வரும் வட கொரியாவில் அடிக்கடி மரண தண்டனை, ஆளுள் தண்டனை வழங்கப்படுவது சர்வ சாதரண நிகழ்வாகிவிட்டது. இந்த நிலையில், வட கொரியாவில் பைபிளுடன் பிடிபட்ட கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் 2 வயதுக் குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், ``வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
மதப் பழக்கவழக்கங்கள், பைபிளை வைத்திருந்ததற்காக அந்தக் குடும்பம் கைதுசெய்யப்பட்டிருக்கிறது. அந்த குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் 2009-ம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த முகாம்களில் நடந்தேறும் 90% மனித உரிமை மீறல்களுக்கு அந்த நாட்டின் மாநில பாதுகாப்பு அமைச்சகம் தான் பொறுப்பேற்க வேண்டும்” எனக் குற்றம்சாட்டப்பட்டியிருக்கிறது.
கொரியா ஃபியூச்சர் (Korea Future) என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த அமைப்பானது கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வட கொரியாவில் பெண்களுக்கு மறுக்கப்படும் மத சுதந்திரத்தை மேற்கோள் காட்டும் வகையில், இதனால் துன்புறுத்தல்களை அனுபவித்த 151 பெண்களின் நேர்காணல்களை வெளியிட்டது.
இந்த நிலையில் `கொரியா ஃபியூச்சர் ' எனும் அமைப்பின் இந்த பதிவை மேற்கோள் காட்டிய வெளியுறவுத்துறை, "வட கொரியாவில் மதம் சார்ந்த பொருள்கள் வைத்திருப்பவர்கள், மத வழிபாடு நடத்துபவர்கள், மதகுருக்களை சந்திப்பவர்கள் மேல் வழக்கு பதிவுசெய்யப்படலாம். இதனால் அவர்கள் கைதுசெய்யப்படலாம், உழைப்பு சுரண்டல் செய்யப்படலாம், துன்புறுத்தல் நடத்தப்படலாம், வாழ்வுரிமை பறிக்கப்படலாம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகலாம்" என தெரிவித்திருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் வட கொரியாவில் அத்துமீறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஐ.நா சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
from International https://ift.tt/pAnXF5Q
via
