உலகின் பிரபலமான வலைதளங்களில் குறிப்பிடத்தக்கது கூகுள். ஒவ்வொரு நாளும் அதன் பயன்பாடு அதிகரித்துவருவது நாம் அறிந்ததே. இந்த நிலையில், பயனர்களுக்குத் தெரியாமல், அவர்களின் லொகேஷன் குறித்த விவரங்களை கூகுள் சேகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சாண்டா கிளாரா கவுண்டி உயர் நீதிமன்றத்தில், அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா, வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து, இது தொடர்பான விசாரணையை கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கையிலெடுத்தது.
இந்த நிலையில், நேற்று இந்த விசாரணை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ``எங்கள் விசாரணையில் கூகுள் நிறுவனம் தனது பயனர்களிடம் 'பயனர்கள் தங்கள் பயன்பாட்டை நிறுத்தியவுடன், அவர்களின் இருப்பிடம் (Location) கண்காணிக்கப்படுவது நிறுத்தப்படும்' என்ற உத்தரவாதத்தை வழங்குகிறது. ஆனால், அதன் செயல்பாடு, அதற்கு நேர்மாறாக, தனது சொந்த வணிக லாபத்துக்காக பயனர்களின் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணிக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``கூகுளின் இத்தகைய செயல், ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கான தீர்வுக்கு கூகுள் பொறுப்பேற்க வேண்டும். இனி இருப்பிடம் தொடர்பான அமைப்புகளை இயக்கும்போது, பயனர்களுக்கு கூடுதல் தகவலைக் காண்பிக்க வேண்டும். இருப்பிட கண்காணிப்பு குறித்தும் பயனர்களிடம் அதிக வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்.
இதுவரை நிகழ்ந்த தவற்றுக்காக கூகுள் நிறுவனத்துக்கு 93 மில்லியன் டாலர் (ரூ.7,000 கோடி) அபராதம் விதிக்கப்படுகிறது" எனத் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ``சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் செய்த அப்டேட் தொடர்பான மேம்பாடுகளுக்கு இணங்க, பல ஆண்டுகளுக்கு முன்பு மாற்றிய காலாவதியான கொள்கைகளின் அடிப்படையில் இந்த வழக்கை அணுகி, முடித்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from International https://ift.tt/WgzFAxP
via
