சிங்கப்பூரில், சீனாவைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் ஒருவர், தனது காரில் மகளுடன் பயணம் செய்த பெண்ணை `இந்தியர்’ என நினைத்து `முட்டாள்' என்று திட்டிய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
இது குறித்து வெளியான தகவலின்படி, கடந்த சனிக்கிழமையன்று ஜனெல்லே ஹோடன் (Janelle Hoeden) என்ற 46 வயது பெண், மதியம் 2 மணியளவில் தடா (TADA) பகுதியிலுள்ள ரைடு-ஹைலிங் பிளாட்ஃபார்மில் (Ride-Hailing Platform) டாக்ஸி ஒன்றை முன்பதிவு செய்திருக்கிறார்.
பின்னர் அங்கு வந்த டாக்ஸியில் ஜனெல்லே ஹோடன், தன் ஒன்பது வயது மகளுடன் ஏறினார். டாக்ஸி சென்றுகொண்டிருக்கும்போதே, செல்லுமிடம் குறித்து ஜனெல்லே ஹோடன் தவறான தகவல் கூறியதாக டிரைவர் அவரைத் திட்ட ஆரம்பித்திருக்கிறார். இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றவே, ஜனெல்லே ஹோடன் தன்னுடைய மகளிடம் செல்போனில் வீடியோ எடுக்குமாறு கூறியிருக்கிறார்.
அப்போது, ஜனெல்லே ஹோடனைப் பார்த்து டிரைவர், ``நான் சீனாவைச் சேர்ந்தவன். நீங்கள் ஓர் இந்தியர், நீங்கள் முட்டாள்" என்று திட்ட, ``நான் இந்தியர் அல்ல, சிங்கப்பூர் யூரேசியன்" என்று ஜனெல்லே ஹோடன் கூறியிருக்கிறார். இது வீடியோவில் பதிவாகவே, ஜனெல்லே ஹோடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதைப் பதிவிட்டிருக்கிறார். இது குறித்து ஜனெல்லே ஹோடன், ``நான் இந்தியராகவே இருந்தாலும், அவர் அவ்வாறு கூறியது தவறு. அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார். இன்னொரு பக்கம், ஜனெல்லே ஹோடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோ, `Wake Up Singapore' என்ற ஊடக தளத்திலும் பகிரப்பட்டிருக்கிறது.
இதை கவனித்த தடா சிங்கப்பூர் நிர்வாகம், இந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட டிரைவரிடம் விசாரணை நடத்திவருவதாகத் தெரிவித்தது. இது பற்றி தடா செய்தித் தொடர்பாளர், ``இன வேறுபாடுகளைத் தூண்டும் கருத்துகள் நேரடியாக தடா சமூக வழிகாட்டுதல்களை மீறுகின்றன. இந்த விவகாரத்தில் நாங்கள் விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம். அதனடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். எத்தகைய சூழலிலும் இனவாதக் கருத்துகளை மன்னிக்க முடியாது" என்று தெரிவித்தார்.
யூரேசியர்கள் இந்தியர்களைப் போன்ற நிறமுடையவர்கள் என்றும், அவர்கள் இந்தியர்களைப் போன்று தோற்றமளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
from International https://ift.tt/hK2i1oB
via
