கோவிட் தொற்றின் பேரழிவு தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத சீனா மீண்டும் ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.
சீனாவில் மர்மமான நிமோனியா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான மக்கள், குறிப்பாக குழந்தைகள் அதிகளவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் உள்ள மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக வந்தவண்ணம் உள்ளனர்.
ஏற்கெனவே கோவிட் தொற்றுப்பரவல் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பரவியதால் இந்த பாதிப்பும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர்.
சீனாவில் பரவும் மர்ம நோய்...
இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செய்தியாளர் சந்திப்பில், ``மக்களிடையே சுவாச நோய்கள் அதிகரித்து வருகின்றன. கோவிட் தொற்றை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளின் மூன்று வருட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், சீனாவில் தற்போது காய்ச்சல் போன்ற நோய்களின் அதிகரிப்பு உள்ளது.
கோவிட்-19 மட்டுமன்றி இன்ஃப்ளுயென்ஸா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா போன்ற பிற நோய்க்கிருமிகளும் பரவுவதற்கு கோவிட் நோய்த் தொற்றின் தளர்வு நடவடிக்கைகள் காரணமாக அமைந்ததுள்ளன'' என்று நோய்ப் பரவலுக்கு தளர்வு நடவடிக்கைகளை காரணமாகச் சுட்டிக் காட்டி உள்ளனர்.
நோய் எவ்வாறு பரவுகிறது, ஆய்வக முடிவுகள், குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டுள்ளது.
அதேசமயம் மக்களிடையே நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கான பொது சுகாதார ஆலோசனையையும் வழங்கி உள்ளது.
ஏற்கெனவே கோவிட் தொற்று சமயத்தில் சீனாவின் வெளிப்படையற்ற தன்மை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து இருந்தது. தற்போது சீனாவிடம் கேட்டுள்ள விவரங்கள் அளிக்கப்படுமா என்பதை வரும் நாள்களில் தான் பார்க்க வேண்டும்.
from International https://ift.tt/Ig27xSw
via
