கோவிட் தொற்று பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு இருந்தாலும், சிலருக்கு பாதையமைத்து கொடுத்துள்ளது. அமெரிக்கா சிகாகோவில் பல வருட டெக் ஊழியர்களாக அலங்க்ருதா சந்திரா என்பவரும் அவரது கணவர் மெஹர் குண்டவரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.
2020 கோவிட் தொற்றின் சமயம் இந்தியாவுக்கு அலங்க்ருதா சந்திரா திரும்பினர். ஒரு வருடம் கழித்து மெஹரும் இந்தியா வந்துள்ளார்.
மனிதர்களுக்கு பெரிய தேவையெல்லாம் வேண்டாம். அவர்களால் சுற்றியுள்ள அடிப்படைத் தேவைகளை வைத்தே நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும். அதற்கு இயற்கையின் துணை மட்டும் இருந்தால் போதுமென தற்சார்பு வாழ்வியலை (Sustainable Living) நோக்கி இவர்கள் நகரத் தொடங்கினர்.
அடிப்படை தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், இவையனைத்தையும் ஒருசேரக் கொடுப்பதே இவர்களின் இலக்காக இருந்தது.
அலங்க்ருதா சந்திரா இந்தியா வந்தவுடன் ஆடைகளில் பயன்படுத்தப்படும் இயற்கை சாயங்கள் (Natural Dyes) குறித்து கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.
சில மாதத்திலேயே நன்கு கற்று தேர்ந்தவர், `Elephant In You’ என்ற பெயரில் ரசாயனங்கள் பயன்படுத்தாத `ரெடி டு வியர்’ ஆடைகளை விற்கத் தொடங்கினார்.
உடையைத் தொடர்ந்து உணவில் கவனம் செலுத்தத் தொடங்கிய இந்த தம்பதியினர், மெஹரின் சொந்த மாநிலமான தெலங்கானாவில் விவசாயம் செய்யத் தொடங்கினர். 8 ஏக்கர் குடும்ப நிலத்தில் 4 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்தனர்.
இப்போது அந்த பண்ணையில் 40 வகையான பழ மரங்கள் உள்ளன. 10 வகையான மாம்பழங்கள், மூன்று வகையான கொய்யா பழங்கள், மாதுளை, சப்போட்டா, எலுமிச்சை, அவக்கடோ, சிங்கப்பூர் செர்ரி போன்றவற்றை வளர்த்து வருகின்றனர்.
இந்த பண்ணையைக் காண பார்வையாளர்களும் வந்து செல்கின்றனர். பார்வையாளர்கள் வந்து தங்கிச் செல்ல மண் வீட்டைக் கட்ட திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. இதன்மூலம் இயற்கைக்கு அருகில் வாழும் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இயற்கையை நோக்கி நகர்வோம்!
from International https://ift.tt/Uif4NAt
via
