முதலாம் உலகப்போரின் முக்கிய வில்லனாக ஜெர்மனி கருதப்படுவதற்குக் காரணம் போரைத் தொடங்கியது அதுதான். பிற நாடுகளில் அதிக நாசங்களை (முக்கியமாக பெல்ஜியத்திலும் பிரான்சிலும்) உண்டாக்கியதும் அதன் ராணுவம்தான். `நச்சு வாயு' என்ற கொடுமையான யுக்தியைப் போரில் முதலில் பயன்படுத்தியது அவர்கள்தான். என்றாலும் ஜெர்மனி அரசின் தவறுகளுக்காக ஜெர்மானிய மக்கள் அதிக அளவில் தண்டிக்கப்பட்டார்கள். இத்தனைக்கும் போர் வேண்டாம் என்ற குரல் அங்கு ஒலித்துக்கொண்டே இருந்தது. சொல்லப்போனால் அமைதி ஒப்பந்தத்தில் மிக மிக அதிகமாக ஜெர்மனி தண்டிக்கப்பட்டது கூட இரண்டாம் உலகப் போருக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பவர்கள் உண்டு.
ஜெர்மனியை மட்டுமே முக்கிய குற்றவாளியாக்கிவிட முடியுமா? பார்ப்போம்.
பல ஐரோப்பியச் சக்திகள் தொடக்கத்திலிருந்தே தங்களை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பல நாடுகளைத் தங்கள் காலனி தேசங்களாக்கி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இந்தப் போட்டியின் ஒரு விளைவு என்றும் முதலாம் உலகப்போரைக் கூற முடியும். போரில் கூட்டணி வைத்துக்கொண்டதும் நாசங்களை அதிகரித்தது. இரண்டு தனி நாடுகளாக ஆஸ்திரியா - ஹங்கேரியும் செர்பியாவும் மட்டும் போரிட்டிருந்தால் அது விரைவில் முடிந்து இருக்கும். தவிர வெறுப்புகளைக் களையும் அளவுக்குச் சக்தி வாய்ந்த தேசத் தலைவர்கள் அப்போது இல்லாமல் போனார்கள். புத்தம்புதிய நாசக்கார போர்க் கருவிகளை உருவாக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வேறு அப்போது வளர்ந்து தொலைத்திருந்தது. இப்படிப் பல காரணங்கள் முதலாம் உலகப்போருக்கு வழிவகுத்தன, அதை உக்கிரம் ஆக்கின.
அமைதி ஒப்பந்த நிபந்தனைகளில் அடிவாங்கிய ஜெர்மனியின் மக்கள் தங்களுக்கிடையே உறுதியான தலைவர் உருவாகி உலக அளவில் ஜெர்மனிக்கு மீண்டும் மரியாதையைப் பெற்றுத் தர வேண்டும் என்று ஏங்கத் தொடங்கினார்கள். (அதன் உச்சக்கட்டம்தான் நாஜி கட்சி உருவானதும் அதன் தலைவராக அடால்ஃப் ஹிட்லர் பின்னர் தலையெடுத்ததும்).
போரிலிருந்து திரும்பிய (எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) ராணுவ வீரர்களின் நிலைதான் பரிதாபமாக இருந்தது. அவர்களில் பலர் போர்ச் சூழலால் மன பாதிப்பு அடைந்து இருந்தனர். உடல் ஊனமுற்றும் இருந்தனர். இவர்களைச் சரி செய்வதற்காகப் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவ்வளவு ராணுவ வீரர்கள் இனி தேவைப்பட மாட்டார்கள் என்பதால் அவர்களுக்காகப் புதிய வேலைகள் உருவாக்கப்பட வேண்டிய கட்டாயம் உண்டானது.
அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன் பாரிஸ் ஈபிள் டவரில் இருந்து முதல் வெடியை வெடித்து அதைக் கொண்டாடியது பிரான்ஸ் நாட்டு அரசு. சுமார் 500 மாணவர்கள் அந்த நாட்டு ராணுவ அமைச்சக அலுவலகத்துக்கு முன்பாகக் கூடித் திரும்பி வந்த ராணுவ வீரர்களை வரவேற்றனர்.
பிரிட்டனிலும் கொண்டாட்ட மனநிலை உருவானது. "பதுங்கு குழிகளிலிருந்து ஜெர்மன் ராணுவ வீரர்கள் வெளிப்பட்டனர். எங்களை வணங்கிவிட்டு தங்கள் வழியில் சென்றனர். அவ்வளவுதான். இதைவிடக் கொண்டாட வேறென்ன வேண்டும்?" என்று ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி குறிப்பிட்டார்.
ஹென்றி குந்தெர் என்ற ராணுவ அதிகாரி மிக வித்தியாசமான காரணத்துக்காக நினைவு கொள்ளப்பட்டார். அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த இவர், அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னால் எதிரணியைச் சேர்ந்த 60 பேரைக் கொன்றார். ஜெர்மன் ராணுவத்தினர் இதற்குச் சிறிதும் தயாராக இல்லை. ஏனென்றால் அமைதி ஒப்பந்தம் விரைவில் (அன்றே) வந்துவிடப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியும். போரின் கடைசி நாளன்று ஒரு வித உக்கிரம் காணப்பட்டது. முடிந்தவரை எதிரிகளைக் கொன்றுவிட வேண்டும் என்ற வெறி! ஆனால் அது போர் வெற்றிகளுக்கு முரணானது என்பதால் பிரான்ஸில் நவம்பர் 11 அன்று இறந்த பல பிரெஞ்சு வீரர்களின் கல்லறைகளில் அவர்கள் நவம்பர் 10 அன்றே இறந்ததாகக் குறிப்பிடப்பட்டது.
நாடுகள் எல்லாம் போரில் மடிந்த தங்களின் ராணுவ வீரர்களுக்காக நினைவகங்களை எழுப்பின. புது டெல்லியில் உள்ள இந்தியா கேட் அப்படிப்பட்ட ஒன்றுதான். பிரான்ஸில் உள்ள நியூவ் சாப்பலே பகுதியில் முதலாம் உலகப்போரிலிருந்து இந்திய ராணுவ வீரர்களுக்காக மட்டுமே ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.
முதலாம் உலகப்போரில் வேறுவிதமான பாதிப்பை சீனா சந்தித்தது. மனபாதிப்பு. அத்தனை நாடுகளும் தன்னை ஒதுக்கி வைத்துவிட்டதாக அது நினைத்தது. தொடக்கத்தில் நேச நாடுகள் சீனா தங்களுடன் இணைந்து போராடுவதில் அக்கறை காட்டவில்லை. பின்னர் போரில் தங்களுக்குப் பெரும் சேதம் விளைந்திருந்த நிலையில் பிப்ரவரி 1916ல் 'ஜப்பானும் பிற நேச நாடுகளும் ஒத்துக்கொண்டால் சீன ராணுவத்தை நம் தரப்பில் ஏற்றுக்கொள்ளலாம்’ என்று அறிவித்தார் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் ஜான் ஜோர்டான். ஜப்பான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. கிழக்காசியாவில் தனது முக்கியத்துவம் குறையக்கூடாது என்று அது நினைத்தது.
எனினும் போரில் மறைமுகமாகப் பங்கு கொண்டது சீனா. ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அனுப்பியது. அவர்கள் பீரங்கிகளை ரிப்பேர் செய்வது, வெடிகுண்டுகளைச் சரியாகச் சேமித்து வைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்கள். சில சமயம் பதுங்கு குழிகளை வெட்டவும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர்.
ரஷ்ய சாம்ராஜ்யம் பெரும் மாற்றம் கண்டது. ஓட்டோமான் சாம்ராஜ்யம் அழிந்தது. ஆஸ்திரியா - ஹங்கேரி பிளவு கண்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பெரும் கேள்விக்கு உள்ளானது. அமெரிக்காவுக்கு உலகளவில் முக்கியத்துவம் கிடைத்தது. லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற உலக சமாதான அமைப்பு உருவானது. ரஷ்யப் புரட்சி, ஜெர்மனியில் நாசிசம், இத்தாலியில் பாசிசம் போன்றவை உருவாகக் காரணமானது. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள பகைமையை அதிகப்படுத்தியது. நேச நாடுகள் அணிகளுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. போரில் தொழில்நுட்பத்தின் பங்கு மிக அபாயகரமானது என்பதை உணர வைத்தது.
இத்தனை பெரும் மாறுதல்களுக்கும் காரணமான முதலாம் உலகப்போர் பத்து கோடி இளைஞர்களின் உயிர்களைக் காவு வாங்கியதோடு, இருபது கோடி பேரை உடல் ரீதியாகப் பாதித்து, அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விட்டுத்தான் ஓய்ந்தது.
- போர் முடிந்தது...
from International https://ift.tt/NxuK7ti
via
