கடந்த சில மாதங்களாகவே ரஷ்யா - உக்ரைன் எல்லையில் பதற்றம் நீடித்துவந்தது. அந்த எல்லைப் பதற்றம் தற்போது உச்சம் தொட்டிருக்கிறது. உக்ரைன் எல்லையில் சுமார் 1,30,000 வீரர்களைக் குவித்திருக்கிறது ரஷ்யா. அதோடு, எல்லையிலிருக்கும் ரஷ்ய ராணுவ வீரர்கள் தீவிரப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனால் எந்த நேரமும் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் நிலவிவருகிறது. ரஷ்யா, `போர் தொடுக்கும் எண்ணமில்லை' எனத் தொடர்ந்து மறுத்துவந்தாலும், அமெரிக்காவைச் சேர்ந்த உளவு அமைப்புகள் இரு நாடுகளுக்குமிடையே போர் நிகழ்வது நிச்சயம் என்கின்றன. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் குவித்து வைத்திருந்த 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களில் சில குழுவினரை தங்கள் நாட்டு முகாம்களுக்கே திருப்பி அழைத்துக் கொண்டது. , `ராணுவ வீரர்களின் பயிற்சி முடிந்ததால் வீரர்களை முகாம்களுக்கு திருப்பியனுப்பினோம்’ என்றது ரஷ்யா.
இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த விவகாரம் தொடர்பாக 40 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக உரையாடியிருக்கிறார். ``ரஷ்யா - உக்ரைன் எல்லையில் நிலைமை மோசமானதாக இருந்தாலும், அதில் உரிய தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை'' என்று பைடனும் ஜான்சனும் கூறியிருக்கிறார்கள்!
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்களது மக்களை உடனடியாக உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியிருக்கின்றன.
இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``ரஷ்யா, எங்கள் நாட்டின்மீது 16-ம் தேதி தாக்குதல் நடத்தக்கூடும்'' என்று பேசியிருப்பது உலக அரங்கில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அதே சமயத்தில், போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒருவேளை இரு நாடுகளுக்குமிடையே போர் ஏற்பட்டால், உலக அரங்கில் இது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்து என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மூன்றாம் உலகப் போர்?
ரஷ்யா, உக்ரைன்மீது போர் தொடுக்கும் பட்சத்தில், அது ஐரோப்பிய நாடுகளின் அமைதியைக் குலைக்கும் எனச் சொல்லப்படுகிறது. ``போர் நிகழும் பட்சத்தில், உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் சிலவும் நேரடியாக உதவி செய்தால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழும் மிகப் பெரிய போராக இது மாறும். ஆனால், மூன்றாம் உலகப் போர் ஏற்படும் சூழல் உருவாக வாய்ப்பில்லை'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். ரஷ்யாவைக் காட்டிலும் படை பலத்தில் குறைவாக இருக்கும் உக்ரைனுக்குப் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படுமெனத் தெரிகிறது.
கடந்த திங்கள்கிழமை (பிப். 14) அன்று, மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டென் சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் சரிந்தது. இதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றாக அமைந்தது உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம்தான். எனவே, இந்தப் போர் நடந்தால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வர்த்தகம் தடைப்பட்டு, பொருளாதாரச் சரிவைச் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.
சீனாவுக்கு லாபம்?
`உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், ரஷ்யாவுக்கு நாங்கள் பொருளாதாரத் தடை விதிப்போம்' என்று எச்சரித்திருந்தது அமெரிக்கா. ஒருவேளை இந்தப் போர் நிகழ்ந்தால், அமெரிக்கா ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும். அப்படி ரஷ்யாவுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் பட்சத்தில், சீனாவுடன் ரஷ்யா கைகோர்க்கும். இதன்மூலம், ரஷ்யாவுடன் சீனா நல்ல நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு லாபம் அடையும் எனச் சொல்லப்படுகிறது. இது உலக அரங்கில், அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படும்.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்துகொண்டும், படித்துக் கொண்டும் இருக்கிறார்கள். எனவே அங்கு போர் மூண்டால், இந்தியர்களை உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக மீட்டெடுப்பது இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
ரஷ்யா, அமெரிக்கா என இரண்டு நாடுகளுடனும் நல்ல நட்புறவிலிருக்கிறது இந்தியா. இந்த நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்டால், எதாவது ஒரு நாட்டின் பக்கம் இந்தியா நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த விவகாரத்தில் இந்தியா தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவே, ரஷ்யா அல்லது அமெரிக்காவின் பகையை இந்தியா சந்திக்க நேரிடும் எனச் சொல்லப்படுகிறது. இது சீனாவுக்கு மேலும் சாதகமாக அமையும். ஒருவேளை போர் மூண்டால், இந்த விவகாரத்தை இந்திய வெளியுறவுத்துறை எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
from International https://ift.tt/xhPMYTu
via
