சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நூற்றுக்கணக்கான வங்கி வைப்பாளர்கள் தங்கள் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதைக் குறித்துப் பெருகிய முறையில் கவலையடைந்துள்ளனர், குறைந்தபட்சம் நான்கு சிறிய "கிராம" வங்கிகளிலிருந்து சேமிப்பை மீட்டெடுக்க மாகாண அதிகாரிகள் உதவ வேண்டும் என்று கோரியுள்ளனர்.
சீனாவில் சில ஆண்டுகளாகப் பல சிறிய வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்குவதன் மூலமும், தொலைதூரத்திலிருந்து இணையத்தில் டெபாசிட் செய்பவர்களைப் பதிவு செய்வதன் மூலமும் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட முயன்றன. இதனை அடுத்து நான்கு ஹெனான் வங்கிகள் ஏப்ரல் 18 அன்று பணம் எடுப்பதை நிறுத்தியது. சீன வங்கி மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம், கிராம வங்கிகளின் முக்கிய பங்குதாரரான ஹெனான் நியூ பார்ச்சூன் நிதி திரட்டியதில் நிதிக் குற்றங்கள் இருப்பதால் அவை விசாரணை வலையில் இருப்பதாகக் கூறியுள்ளது.
பணத்தைத் திரும்பப் பெற முடியாமல், டெபாசிட் செய்தவர்கள் இணையத்திலும் நேரிலும் போராட்டம் நடத்தத் தொடங்கினர். மே 23 அன்று, பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுக்கும் முன் போராட்டங்கள் வெடித்தன. ஜூன் மாதத்தில், நாடு முழுவதிலும் இருந்து பல வைப்பாளர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஜெங்ஜு (Zhengzhou) இல் ஒன்றுசேரத் திட்டமிட்டனர். ஆனால் அவர்கள் பயணம் செய்வதற்கு முன்பே, கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பயன்படுத்தும் மென்பொருளால் அவர்கள் தடுக்கப்பட்டனர். அவர்களின் தொலைபேசிகளில் பச்சை குறியீடு சிவப்பு நிறமாக மாறியது.
கோவிட்டின் இருப்பை உணர்த்தும் விதத்தில் சிவப்பு மற்றும் பச்சை குறியீடுகள் மென்பொருள் மூலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. தொலைப்பேசியில் சிவப்பு குறியீடு காட்டப்பட்டால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அனைவரது தொலைப்பேசியிலும் சிவப்பு குறியீடு தென்பட மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.
பின்னர், ஜூலை 10 அன்று, சீனாவைச் சுற்றியுள்ள எதிர்ப்பாளர்கள், இந்த முறை பச்சை சுகாதாரக் குறியீடுகளுடன் Zhengzhou-க்கு வந்து, நாட்டின் மத்திய வங்கியான சீனாவின் மக்கள் வங்கியின் கிளை அலுவலகத்தின் முன் கூடியிருந்தனர். “டெபாசிட் இல்லை. மனித உரிமைகள் இல்லை” போன்ற முழக்கங்களுடனும் பேனர்களில், “ஹெனனில் 400,000 வைப்பாளர்களின் சீனக் கனவுகள் சிதைந்துவிட்டன” என்று எழுதப்பட்டு, பல்வேறு ஆர்ப்பாட்டங்களுடன் போராட்டம் வெடித்தது.
வெள்ளை சட்டை அணிந்து ஒரு கும்பலும் மக்களின் எதிர்ப்பிற்குக் கண்டனம் தெரிவித்தது. வாட்டசாட்டமான அந்த அணி மக்கள் கூட்டத்தைத் தாக்கும்போது நீலச் சட்டை அணிந்த அதிகாரிகள் ஏதும் பேசாமல் நின்றுகொண்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் மோதலில் காயப்பட்டு, பேருந்துகளில் ஏற்றப்பட்டிருக்கின்றனர். ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, சீன ஊடகவியலாளர்கள் எதிர்ப்புச் செய்திகளை இணையத்தில் வெளியிடாமல் தடுத்தும் அதையும் மீறி வெளியே வந்த ஆர்ப்பாட்டங்களின் வீடியோக்களை நீக்கியும் வருகின்றனர் என்று தெரிகிறது.
இது மட்டுமில்லாமல் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் பீரங்கி ஏந்திய ராணுவ வாகனங்களை மக்கள் போராடும் வீதியில் அரசு அனுப்பியிருக்கிறது என்று அந்நாட்டு மக்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும் சீன அரசாங்கத்தின் சமீபத்திய அறிக்கைத் தெரிவித்திருப்பது, 'விரைவில் வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை அவர்களிடம் சென்று சேரும், அதுவரை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்' என்பதாகும்.
வங்கிகள் திவாலாகி மக்களின் பணத்தை முடக்கும் இந்நிலை இன்னொரு இலங்கையை நம் முன்னே காட்சிப்படுத்தப் போகிறதா என்ற பேச்சுதான் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாக்கப்பட்டுவருகிறது.
from International https://ift.tt/DWsVNLy
via
