ஈரானில் ஒன்பது வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புக் காவல் படை அமைக்கப்பட்டுள்ளது. இக்காவல் படையினர், பெண்கள் ஆடை அணியும் விதத்தைக் கண்காணிக்க ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
ஈரான் அரசின் இந்தக் கடுமையான விதிமுறையின் விளைவாக ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண், முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று சிறப்புப் படை கவால்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், கடந்த செப்டம்பர் 16-ம் தேதி காவல்துறையின் துன்புறுத்துதலால் மாஷா அமினி உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஈரான் மற்றும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும், மாஷா அமினியின் இந்த மரணம் மனித உரிமைக்கு எதிரானது, நியாயமற்றது எனக் குரல் கொடுக்கத் தொடங்கினார். தற்போது, இந்தத் தீப்பொறி போராட்டமாக உருவெடுத்து ஈரான் மக்கள், மாஷா அமினிவின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். மேலும், ஈரான் அரசு இந்தக் கடுமையான விதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஈரான் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார் பிரபல ஈரானிய இயக்குநரான ரேசா டார்மிசியன் (Reza Dormishian). இவரது தயாரிப்பில் தருஷ் மெஹர்ஜுய் இயக்கத்தில் உருவாகியிருந்த 'A Minor' என்ற திரைப்படம் கோவாவில் நடைபெற்ற இந்தியச் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) திரையிடப்பட்டது. இதற்காக இந்தியா வருவதற்காகத் திட்டமிருந்த டார்மிசியனிற்கு, ஈரான் அரசு அனுமதி மறுத்துள்ளது. டார்மிசியன், ஈரான் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதுதான் இதற்குக் காரணம் என்று பலரும் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
from International https://ift.tt/Ynl0NZA
via
