சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு நெருக்கமாகத் திகழ்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு திடீரெனக் காணாமல் போன நிலையில், தற்போது அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் ஜி ஜின்பிங். ஏற்கெனவே இதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் காணாமல் போனதும், அவர் பதவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், சீனாவில் திடீரென்று அமைச்சர்கள் காணாமல் போவதும், அவர்கள் பதவி பறிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருவது சீன மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலில் காணாமல் போன வெளியுறவுத்துறை அமைச்சர்:
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங்(Qin Gang) கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து காணாமல் போனார். கடைசியாக ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்ட கின் கேங் அதன்பிறகு நடைபெற்ற எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் தென்படவில்லை. சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்ட பிறகுதான் இப்படியொன்று நிகழ்ந்ததே வெளியுலகிற்கு தெரியவந்தது. ஒரு மாதம் கடந்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்தநிலையில்தான், கின் கேங் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சீனாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டார்.
என்ன காரணம்: தொடக்கத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் பொது நிகழ்ச்சிகளில் கின் கேங் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் பரவியது. பின்னர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு மற்றொரு ரகசியமும் கிசுகிசுத்தது. அதாவது, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஃபூ ஷியாவோடியன் (Fu Xiaotian) என்ற பெண்ணுடன் கின் கேங் ரகசிய உறவில் இருந்ததாகவும், சீன அரசின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் திருமணத்தை மீறிய தொடர்பை வைத்துக்கொள்ளக்கூடாது என்பது அதிகாரப்பூர்வ உத்தரவு என்பதால் அந்த விதியை மீறிய கின் கேங் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன.
தற்போது காணாமல் போன பாதுகாப்புத்துறை அமைச்சர்:
சீன வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங்கைப் போலவே, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த லி ஷாங்ஃபூவும் காணாமல் போனார். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சீனா-ஆப்பிரிக்கா அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அதன்பிறகு பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாததால் தொடர்ந்து லி ஷாங்ஃபூவும் காணாமல் போய்விட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ஷாங்ஃபூ நீக்கப்பட்டுவிட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது. முறைப்படி ஷாங்ஃபூ நீக்கம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதிபர் ஜி ஜின்பிங் ஒப்புதலுடன் நீக்கப்பட்டிருக்கிறார்.
என்ன காரணம்: லி ஷாங்ஃபூ சீனப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து சீனா-அமெரிக்கா இடையேயான ராணுவப் பரிமாற்றங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சீனா ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய விவகாரத்தையடுத்து லி ஷாங்ஃபூ தங்கள் நாட்டுக்கு வரக்கூடாது என அமெரிக்கா தடைவிதித்தது. அதபோல, இவர் அமைச்சராக இருந்தபோது சீனா தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கியதும் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்காக அடுத்த மாதம் அமெரிக்க பாதுகாப்புத்துறை பிரதிநிதிகள் சீனாவுக்கு வரவிருக்கின்றனர். இந்தச் சூழலில் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட லி ஷாங்ஃபூ பாதுகாப்பு அமைச்சராக இருப்பது ஒத்துவராது என்பதால்தான் அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
`நீக்கப்படுவதெல்லாம் சரிதான்... காணாமல் போனவர்களின் கதி என்ன?' என்பதை சீன அரசாங்கமே மறைப்பதுதான் இங்கு புரியாத புதிர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from International https://ift.tt/JWDEGl4
via
