இஸ்லாமிய குடியரசு நாடான இரானில், இஸ்லாமியப் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆடைக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. இதில், கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், போலீஸ் காவலிலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தி போராட்டத்துக்கு வழிவகுத்தது.
அத்தகைய போராட்டங்களில், போராட்டக்காரர்கள்மீது போலீஸார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டார். பலருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு பல கொடுமைகள் அரங்கேறின. இதனால், இஸ்லாமிய அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இரானில் இன்றளவும் தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன.
ஐ.நா சபையும், இரானின் நடவடிக்கைகளை எச்சரித்தது. இருப்பினும் கடந்த செப்டம்பரில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. `ஹிஜாப் மசோதா' என்றழைக்கப்படும் இந்த மசோதா, அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளை மீறும் பெண்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகுக்கிறது. இந்த நிலையில், இரான் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம், ஹிஜாப் சட்டத்தை மீறியதாக 12 நடிகைகளை திரைப்படங்களில் நடிக்கத் தடைவிதித்திருக்கிறது.
முன்னதாக, தரனேஹ் அலிதூஸ்டி (Taraneh Alidoosti), கட்டயோன் ரியாஹி (Katayoun Riahi), ஃபதேமே மோடமேட்-ஆரியா (Fatemeh Motamed-Aria) ஆகியோர் உட்பட 12 நடிகைகள் ஹிஜாப் சட்டத்தை மீறுவதாக இரானிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இத்தகைய சூழலில், இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இரான் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சர் முகமது மெஹ்தி எஸ்மாலி (Mohammad Mehdi Esmaili), ``சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் வேலைசெய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன்படி, 12 நடிகைகள் திரைப்படங்களில் வேடங்களில் நடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறினார்.
from International https://ift.tt/cr8I1it
via
