பெண் உடையைச் சுற்றிய அரசியல் உள்ளூரில் மட்டுமல்ல, உலக அளவில் விரவிக்கிடக்கிறது. பண்டைய காலந்தொட்டே பெண்ணின் ஆடைத்தேர்வில் அவளது குடும்பமும் சமூகமுமே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. அவற்றுக்கெதிரான போராட்டங்களும் அவ்வப்போது வெடித்துள்ளன. சமீபத்திய உதாரணம், இரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம். இரானிய பெண்களுக்கு ஆதரவாகக் கிளர்ந்துள்ள இந்தப் போராட்டத்தில் திரையுலகினர், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலதுறைகளைச் சேர்ந்த பெண்களும் களமிறங்கியுள்ளனர். அவர்களில் முக்கிய முகம் நோபல் பரிசு பெற்ற நர்கேஸ் முகமதி.
யார் இந்த நர்கேஸ் முகமதி?
இரானில் ஸான்ஜென் என்னுமிடத்தில் 1972-ம் ஆண்டு பிறந்தவர் நர்கேஸ் முகமதி. இரானிலுள்ள ‘Payam hajar’ என்னும் வார இதழில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார். மனித உரிமை அமைப்பொன்றில் இணைந்து பொது வாழ்க்கையிலும் ஈடுபடத் தொடங்கினார். தேசிய அமைதிக்கான சபையை ( National peace council) நிறுவியுள்ளார். மனித உரிமைப் போராட்டத்திலும் பெண்ணுரிமைக்கான போராட்டத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட நர்கேஸ் முகமதி, 2011-ம் ஆண்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்ட்டார். ஜாமினில் வெளிவந்த பிறகு மரண தண்டனைக்கு எதிராக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். இதனால் 2015-ம் ஆண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தன்னுடைய 51 வருட வாழ்க்கையில் 13 முறை கைது செய்யப்பட்டார் நர்கேஸ். சிறை வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. உறவுகளின் பிரிவு, மன அழுத்தம், ஆரோக்கியமான உணவு கிடைக்காதது போன்ற பல இன்னல்கள் இருக்கும், ஆனால் மக்களுக்கான அரசியலில் பிடிப்பும், மன உறுதியும் இருந்தால் மட்டுமே அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள முடியும். சிறைக்குள் பெண்கள் பாலியல் சீண்டலால் பாதிக்கப்படுவதைக் கண்ட முகமதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். சிறைக்குள் அடைத்தாலும் தன்னுடைய இயக்கத்தைத் தடுக்க முடியாது என்று செயலில் நிரூபித்தார். பொது வாழ்க்கை, சிறைவாசம் எல்லாம் குடும்ப உறவுகளை அவரிடமிருந்து தூரப்படுத்தியுள்ளன. 2012-ம் ஆண்டு முகமதியின் கணவர் தகி ரஹ்மானி சில காரணங்களால் இரானை விட்டு வெளியேறினார், தாய் முகமதி சிறையில் இருப்பதால் குழந்தைகளும் அப்பாவுடன் சேர்ந்து இரானை விட்டு வெளியேறியுள்ளனர்.
நர்கேஸ் முகமதியைப் பார்க்கும்போது, ``ஆண்கள் பெண்களுக்கு தாய்மை ஒன்றுதான் பேறு என்று சொல்லும்போது, பெண்களின் மற்ற உரிமைகள் பறிபோகும். தாய்மையை அனுபவிக்கும் பெண்களுக்கு அது குறித்துக் கூற அதிக உரிமை உண்டு. பெண் தாய்மையை போராட்டத்துடன் இணைக்கும் போது அது பொதுவெளியில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லதாக உள்ளது” என்ற எழுத்தாளர் வ.கீதாவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. தன் குழந்தைகளுடன் இருக்க முடியவில்லையே என்னும் ஆற்றாமையை அனைத்து மக்கள் மீது அன்பு செலுத்துவதில், அவர்களின் உரிமைக்காகப் போராடுவதில் தீர்த்துக் கொள்கிறார் நர்கேஸ்.
2018-ம் ஆண்டு இரான் அரசின் சீர்திருத்த முடியாத தன்மையை வன்மையாகக் கண்டித்த அரசியல் ஆளுமைகளில் முகமதியும் ஒருவர். சமீபத்தில் இரானில் கட்டாய ஹிஜாப் அறிவிப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாஷா அமினி என்ற இளம்பெண் கொலைசெய்யப்பட்ட பின்னர் தீவிரமடைந்த போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் நர்கேஸ் முகமதி 2022-ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்தபோதே 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நர்கேஸுக்கு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாம் இரானிய பெண் நர்கேஸ் முகமதி. இவ்வளவு பெரிய அங்கீகாரத்துக்குப் பின்னும் அவரது சிறை வாழ்க்கை தொடர்கிறது. 51 வயதாகும் நர்கேஸுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை பெறச் சென்ற அவர் ஹிஜாப் அணிய மறுத்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்கெதிராக உண்ணாவிரத போராட்டத்தை நிகழ்த்தினார் நர்கேஸ்.
இதயம்தான் பலவீனப்பட்டுள்ளதே தவிர தன்னுடைய மன உறுதியும் கொள்கையும் அரசியல் பிடிப்பும் பலவீனப் படவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் நர்கேஸ் முகமதிக்கு வாழ்த்துகள்.
from International https://ift.tt/7QH1oNR
via
