கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், அமெரிக்காவில் சீக்கியத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலைசெய்யச் சதித்திட்டம் நடைபெற்ற சம்பவமும், பெரும் பேசுபொருளாகின. அமெரிக்கா வழக்கில், இந்திய அரசு அதிகாரி நிகில் குப்தா என்பவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால், அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் புகைச்சல் ஏற்படுத்தியிருக்கிறது.
இதில், கனடா - இந்தியாவுக்கு மத்தியிலான உறவு பெருமளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின், ``ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் தொடர்பு இருக்கிறது" என்ற விமர்சனமும், அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்தியாவால் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் கனடாவில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?" என்ற கேள்வியும் காரசாரமான விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ``இந்தியா மிகவும் பொறுப்புள்ள நாடு என்பதை அனைவரும் அறிவார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்தியா என்ன செய்கிறது என்பதில் இந்திய அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. எனவே, கனடா மட்டுமல்ல, எந்த நாடும், இந்தியாமீது காட்டும் அக்கறையை நாங்கள் எப்போதும் பராமரித்து வருகிறோம். அந்த அக்கறை மட்டுமல்ல, அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களையும், அதன் சில அடிப்படைகளையும் , எப்போதும் கவனிக்கத் தயாராக இருக்கிறோம்.
சர்வதேச உறவுகளில் இவ்வாறான சவால்கள் அவ்வப்போது எழலாம். இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவும் கனடாவும் எழுப்பியிருக்கும் சமீபத்திய பிரச்னைகள் அவசியம் இல்லாதவை. மேலும், அமெரிக்கா - கனடா முன்வைக்கும் இரண்டு பிரச்னைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. அமெரிக்கா முன்வைத்த விமர்சனத்துக்கு சில குறிப்பிட்ட தகவல்களையும், ஆதாரங்களையும் அளித்திருக்கிறது. ஆனால், கனடாவின் குற்றச்சாட்டு அப்படியல்ல. எனவே, இந்தச் சிக்கலை மேலும், தொடர விரும்புகிறதா... இல்லையா என்பது கனடாவின் விருப்பம்" எனக் குறிப்பிட்டார்.
from International https://ift.tt/r8TwQZL
via
