நல்ல ஒரு டீ, சோகமான மனநிலையைக் கூட மாற்றிவிடும். அதனாலேயே தரமான, சுவையான டீயை தேடி சில கிலோ மீட்டர் தூரம் வரை பயணிப்பவர்களும் உண்டு. சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் உலகில் தண்ணீருக்கு அடுத்து அதிகப்படியான மக்கள் குடிக்கும் ஒரு பானமாக டீ இருக்கிறது.
அமெரிக்காவின் பிரைன் மார் கல்லூரியில் (Bryn Mawr College) வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிபவர், மிஷெல் ஃபிராங்க். இவர் சிறப்பான டீயை தயாரிக்கவேண்டுமெனில் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
இதற்காக நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நூல்களை ஆய்வு செய்திருக்கிறார். தேநீருக்கான சரியான செய்முறையைக் கண்டுபிடித்ததாகக் கூறி, தனது வேதியியல் ஆய்வு குறித்த தகவல்களை 'Steeped: The Chemistry of Tea' என்ற புத்தகமாக வெளியிட்டு இருந்தார்.
அதில், ``அமெரிக்காவில் உங்களுக்கு சில மோசமான டீ கிடைக்கிறது. அது பயங்கரமாக உள்ளது. நான் மத்திய மேற்கு பகுதியில் வளர்ந்தேன். இது காபி குடிக்கும் நாடு. ஆனால், டீ எனக்கு எப்போதும் விருப்பமான பானமாக இருந்தது. அதைக் குறித்து படிப்பதற்காக நான் நிறைய நேரத்தைச் செலவழித்தேன்.
இத்தனை வருடங்களில் டீ குடித்து, வேதியலை ஆராய்ச்சி செய்த பின்னர், எனது கோப்பை டீயில் என்ன இருக்கிறது, எப்படி சிறந்த டீ தயாரிப்பது என்பது பற்றி புதிய விஷயங்களை அறிந்து கொண்டேன். டீ பிரியர்கள் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
இங்கிலாந்தின் தேசிய பானம் டீ. இவரின் கருத்து இங்கிலாந்தில் டீ குடிப்பவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு இந்த விஷயத்தில் தலையிட நேரிட்டது. அமெரிக்கப் பேராசிரியரின் `ஸ்பெஷல் டீ' குறித்த ரெசிபி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இதனைத் தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டது. அதில், ``தேநீர் என்பது தோழமையின் அமுதம், நம் நாடுகளை இணைக்கும் புனித பந்தம். நமது சிறப்பான உறவின் அடித்தளத்தை அச்சுறுத்தும் மூர்க்கதனமான முன்மொழிவைக் கண்டு அமைதியாக இருக்க முடியாது.

ஒரு கோப்பை டீயில் ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பது எங்களின் கொள்கை அல்ல; ஒருபோதும் அப்படி இருந்தது இல்லை. அவர்கள் டீயை மைக்ரோவேவில் வைத்துச் சரியான முறையில் செய்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் இங்கிலாந்து அரசின் கேபினட் ஆபிஸ் அறிக்கை வெளியிட்டது. அதில், ``நமது சிறப்பான உறவைப் பாராட்டுகிறோம். இருந்தபோதும் நாங்கள் முழு மனதுடன் உடன்படவில்லை. டீயை கெட்டிலை (Kettle) பயன்படுத்தி மட்டுமே தயாரிக்க வேண்டும்’’ என்று கிண்டல் அடித்துள்ளது.
நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த நகைச்சுவை விவாதங்கள், சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளன.
from International https://ift.tt/ohgLyZQ
via
