‘‘இதுவரை பரவிய எல்லா கொரோனா வைரஸ்களையும் விட அந்தப் புதிய கொரோனா வைரஸ் பயங்கரமானது. அபாயகரமான ஆட்கொல்லி வைரஸ். அது தொற்றியவர்களில் மூன்றில் ஒருவர் இறந்துவிடுவார்கள்’’ என்று எச்சரிக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள். அப்படிப்பட்ட பயங்கரமாக வர்ணிக்கப்படுவது, நியோ கோவ் (NeoCov) என்ற வைரஸ். கொரோனா முதன்முதலில் தோன்றிய சீனாவின் வூஹான் நகரிலிருந்து இந்த எச்சரிக்கை வந்திருப்பதால், உலகமே திகிலில் மூழ்கிக் கிடக்கிறது. ஆனால், ‘இது இன்னும் மனிதர்களைத் தொற்றவில்லை’ என்ற ஆறுதல் செய்தியுடன் NeoCov வைரஸின் வரலாற்றை ஆராய்வோம்.
கொரோனாவின் சாஃப்ட் வெர்ஷனான ஒமைக்ரான் வேரியன்ட் வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில் கொரோனா மீதான அச்சம் உலகம் முழுக்க விலகியிருக்கிறது. ‘‘நல்லவேளை, கொரோனா வந்தது, சீக்கிரம் குணமாகிட்டேன். வைரஸ் ஜுரம் வந்திருந்தா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன்’’ என்று கொரோனாவை ‘கைப்புள்ள’ ரேஞ்சுக்கு டீல் செய்துவரும் மக்களுக்கு NeoCov பற்றிய செய்தி இடியாக இறங்கியிருக்கிறது.
வளைகுடா நாடுகளில் கடந்த 2012 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் `மெர்ஸ்' என்ற வைரஸ் நோய் பரவியது. மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் என்பதன் சுருக்கமே ‘மெர்ஸ்’. ஜுரம், இருமல், அதன்பின் சுவாசக் கோளாறு என்று பிரச்னை தீவிரமாகும். கிட்டத்தட்ட கொரோனா போலவே இருப்பதாக நினைக்கிறீர்களா? ஆமாம், கிட்டத்தட்ட கொரோனா போன்ற குணங்கள் கொண்ட ‘மெர்ஸ்-கோவ்’ (MERS-CoV) என்ற வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் அது. கொரோனா போலவே இதுவும் வௌவால்களில் இருந்த வைரஸ் தான். வௌவால்களிலிருந்து ஒட்டகங்களுக்குப் பரவி எப்படியோ ஒரு கட்டத்தில் மனிதர்களை வந்து அடைந்துவிட்டது. மெர்ஸ் நோயை உண்டாக்கிய வைரஸுக்கு வேகமாகத் தொற்றும் தன்மை இல்லை. அதனால் சில நாடுகளில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பரவி, அப்படியே காணாமல் போய்விட்டது. ஆனாலும், அது தொற்றியவர்களில் மூன்றில் ஒருவர் மரணமடைந்தார்கள்.
இந்த மெர்ஸ்-கோவ் வைரஸைப் போன்ற உருமாற்றம் ஒன்றாகவே நியோகோவ் வைரஸை சீன விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆனால், "இது கொரோனா போல வேகமாகப் பரவும். மெர்ஸ் வைரஸ் போல மரணத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த வைரஸ் உலகம் முழுக்கப் பல நாடுகளில் வேகமாகப் பரவி, பேரழிவை ஏற்படுத்தக்கூடும்’’ என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் வௌவால்கள் மத்தியில் இந்த நியோகோவ் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த வைரஸ் விலங்குகள் மத்தியில் மட்டுமே பரவி வருகிறது. இப்போதைய வடிவில் இருக்கும் வரை இது மனிதர்களைத் தொற்றும் அபாயம் இல்லை. கொரோனா வைரஸ்கள் மனிதர்களுக்குப் பரவும் நேரத்தில், அதன் என்சைம்களில் சிலவகை மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு உருமாற்றம் இந்த நியோகோவ் வைரஸில் ஏற்பட்டால், அதன்பின் பேரழிவைத் தடுக்க முடியாது என்பதே சீன விஞ்ஞானிகளின் அச்சம்.
இவர்கள் கவலையுடன் குறிப்பிடும் இன்னொரு விஷயம், ‘இப்போது உலகம் முழுக்க போடப்படும் கொரோனா வைரஸ்கள் எதுவுமே இந்த நியோகோவ் வைரஸிலிருந்து பாதுகாப்பு தராது. ஏனெனில், அது முற்றிலும் வேறு வடிவத்தில் இருக்கும் கொரோனா வைரஸ்.’
சீன அறிவியல் அகாடெமியும் வூஹான் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த நியோகோவ் வைரஸ் ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி வெறும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார நிறுவனம் இதுவரை கருத்து சொல்லவில்லை. ரஷ்ய அரசின் வைரஸ் மற்றும் பயோ டெக்னாலஜி ஆராய்ச்சி மையம், ‘‘இந்த நேரத்தில் இன்னொரு கொரோனா வைரஸ் மனிதர்கள் மத்தியில் வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்பில்லை. இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது’’ என்று கூறியுள்ளது. இப்படி சீனாவும் ரஷ்யாவும் மட்டுமே மாறி மாறி இந்த நியோகோவ் வைரஸ் பற்றிப் பேசுவதுதான் உலகத்தின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களில் மேற்கத்திய நாடுகள் பலவும் இந்த வைரஸ் பற்றி வேகமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கக்கூடும். இதுவரை மனிதர்களைத் தொற்றிய வைரஸ்களின் வரலாற்றைப் பார்த்தால், வேகமாகப் பரவும் வைரஸ்கள் ஆபத்தாக இருந்ததில்லை. மிக ஆபத்தான வைரஸ்கள் வேகமாகப் பரவியதில்லை. ‘‘இந்த வைரஸ் மனிதர்களைத் தொற்றும் தன்மையுடையதாக மாறுவதற்கு சாத்தியங்கள் குறைவு. அப்படி மாறினால், அது தன் வீரியத்தை இழந்திருக்கும்’’ என்றே உயிரியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
from International https://ift.tt/3He1Oz0
via
