வட கொரியா, எப்போதும் இரகசியங்களோடு அறியப்படுகிற நாடு. இங்கு நடைமுறைப்படுத்தப்படும் விதிகள் குரூரமானவை. அதனாலேயே மீதமுள்ள உலக நாடுகள் கவனிக்கும் ஒரு நாடாக வடகொரியா உள்ளது. வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங் இல் பிறந்தநாள் வருடந்தோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். பிப்ரவரி 16 இல் கொண்டாடப்படும் இந்த நாளில் பொதுமக்கள் நாட்டின் முன்னோடி தலைவர் என்பதால் மரியாதை செலுத்த வர வேண்டும் என்பது விதி. இந்த நாளுக்கான ஏற்பாடாக தந்தையின் பெயரில் உருவாக்கப்பட்ட மலரான கிம்ஜாங்கிலியா என்கிற பெகோனியா தாவர வகையைச் சேர்ந்த மலர்கள் கொண்டு நிகழ்விடம் அலங்கரிக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு பூக்கள் சரியான நேரத்துக்கு மலரவில்லை. இதனால் கோபமடைந்த அதிபர் கிம் ஜாங் உன், அங்கு பணிபுரிந்த தோட்டப் பணியாளர்களை ஆறு மாதத்திற்கு வதை முகாமிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
50 வயதான ஹான், சம்சூ மாகாணத்தைச் சேர்ந்தவர் தோட்டத்தின் மேலாளராக இருந்துள்ளார். கிம்ஜாங்கிலியா மலர்கள் மலர்வதற்கு போதுமான தட்பவெப்பநிலையும் ஈரமும் முக்கியமானது. நாடு முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் இந்த மலர்ச்செடிகள் அமைந்திருக்கும் தோட்டங்கள் கண்டுக்கொள்ளப்படவில்லை. இதனால் பூக்களைச் சரியான நேரத்திற்கு மலரச் செய்ய இயலவில்லை எனத் தோட்ட பணியாளர்கள் தெரிவித்தனர். இதை ஏற்காத அதிகாரிகள், இது அவர்கள் பணியை ஒழுங்காக செய்யாததன் விளைவே என முடிவு செய்து வதை முகாமுக்கு அனுப்பி இருக்கிறார்கள் கொரிய அதிகாரிகள். கிம்ஜாங்கிலியா என்கிற மலர், ஜப்பானிய தோட்டக்கலை ஆராய்ச்சியாளரால் மரபணு மாற்றப்பட்டு 1988இல் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் அதிபரின் தந்தை நினைவு நாளுக்கு மக்கள் யாரும் பொது இடத்தில் சிரிக்கவோ, மது அருந்தவோ, மளிகை பொருட்கள் வாங்கவோ வெளியே செல்லக் கூடாது என 11 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
from International https://ift.tt/PW9Jyel
via
