வீட்டில் ஒரு கரப்பான் பூச்சி இருந்தாலே பதறிப்போய் அதை அடித்து கொன்று விடுவோம். கரப்பான் பூச்சியை வேண்டாத உயிரினமாகவே பார்க்கும் தன்மை மனிதனுக்கு இயல்பிலேயே வந்துவிட்டது. பல்லிக்குப் பயப்படுகிறவர்களை விட கரப்பான் பூச்சிக்கு பயப்படுகிறவர்கள் அதிகம். ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் விதிவிலக்கு என்பதை சீனர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதையெல்லாம் தன்னுடைய இடது கையில் தட்டி விட்டு, கரப்பான் பூச்சியின் டேஸ்ட் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனச் சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணையை வைத்து நடத்தி வருகின்றனர் பலர். இங்கு நாம் பார்த்து அருவருக்கும் ஒரு விஷயம், அவர்களுக்குப் பணம் கொழிக்கும் பிஸினஸாக மாறியிருக்கிறது.
சாதாரணமாகவே சீனர்கள் ஊர்வன, பறப்பன, மிதப்பன என அனைத்தையும் வறுத்துப் பொரித்து ருசித்துச் சாப்பிடும் பழக்கமுடையவர்கள். இதில் பூச்சிகளும் விதிவிலக்கல்ல. ஆனால் கரப்பான் பூச்சிகளில் லாபம் கொழிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழலாம்.
கரப்பான் பூச்சிகளை உணவுக்காக மட்டுமில்லாமல், பல துறைகளிலும் பயன்படுத்துகின்றனர். மருத்துவத் துறையில் கரப்பான் பூச்சியிலிருந்து தயாரிக்கப்படும் ரசம், அல்சர் வயிற்றுவலி, வாய் மற்றும் வயிற்றுப்புண், சரும காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுத்துகின்றன.
அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும், ப்யூட்டி மாஸ்க், உணவு மாத்திரைகள் மற்றும் முடி உதிர்வு சிகிச்சைகளிலும் கரப்பான் பூச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மீன் பண்ணைகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் தேவை நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், ஐடி வேலையை விட்டு பலர் இயற்கை விவசாயத்தைத் தேர்வு செய்வது போல, சீனாவில் லாபம் அள்ளி தரும் கரப்பான் பூச்சியைத் தேர்வு செய்து வருகின்றனர்.
வெளிச்சம் இல்லாத பகுதி, வெதுவெதுப்பான வெப்பநிலை, ஈரப்பதம், சமையல் அறையில் வீசப்படும் கழிவுகள் இவை இருந்தால் போதும், கரப்பான் பூச்சி பண்ணை அமைத்து விடலாம். இதனால் கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணையும் அதன் வியாபாரமும் சூடு பிடித்திருக்கிறது என்றே கூறவேண்டும்.
இந்நிலையில், தமிழகத்திலும் இது போன்ற கரப்பான் பூச்சிகள் வளர்ப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா, கரப்பான் பூச்சியின் இயல்பு என்ன என்பதைக் குறித்து பூச்சியியல் நிபுணர் நீ.செல்வம் அவர்களிடம் கேட்டோம்.
அவர் கூறுகையில், ``கரப்பான் பூச்சியைச் சீனர்கள் சாப்பிடுவார்கள். இங்கே வளர்த்து என்ன செய்ய முடியும். எந்த வேலை செய்வதற்கு முன்பும், அது பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தெரியாமல் வளர்க்கக் கூடாது.
சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கருப்பு சிப்பாய் ஈ (Black Soldier Fly) வளர்ப்பையே இன்னும் நாம் சரியாகச் செய்யாமல் இருக்கிறோம். கரப்பான் பூச்சி நமக்குத் தேவை இல்லை. அவர்கள் பூச்சியை உணவாக உண்டு, மருத்துவத் துறையிலும் பயன்படுத்துகிறார்கள்.
வீட்டின் சமையல் அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் கரப்பான் பூச்சி வராது. கிச்சன் சிங்க், கழிப்பறையின் அடிப்பக்கத்தில் இருந்து வந்து, வீட்டில் சிந்துகிற சாப்பாட்டுக் கழிவுகளைச் சாப்பிடுவதே அதன் வேலை. அதைச் சாப்பிட்டு இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகும். சொல்லப்போனால், கழிவுகளை காலி செய்யும் ஒரு நல்லது செய்யும் பூச்சி… ஆனால், அதை நாம் வேண்டாத விருந்தாளியாகவே பார்த்துப் பழகி விட்டோம்.
சீனாவில் ரொம்ப காலமாகவே வெவ்வேறு விதமான பூச்சிகளைப் பண்ணையில் வளர்க்கிறார்கள். கரப்பான் பூச்சியை வேறுவிதமாக வளர்க்கிறார்கள்.
அவர்கள் ஊரில் தேங்கியுள்ள குப்பை கூளங்களை எல்லாம் கொண்டு வந்து, அதை காலி செய்வதற்குரிய ஆயுதமாகக் கரப்பான் பூச்சியை வளர்க்கிறார்கள்.
அதோடு இதை உணவுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காயைப் போல!... இங்கே நாம் அதைச் செய்யப்போவதில்லை. முதலில் அதைச் சாப்பிடும் எண்ணமே நம்மிடம் இல்லை'' என்று கூறினார்.
from International https://ift.tt/RUk6p9P
via
